(அப்துல்லாஹ் கல்முனை)
சமூக வலைத்தளங்களான இணையத்தளங்கள், முகநூல்கள், வாட்சப் குழுமங்கள் இன்று ஊடகத்துறையில் ஆக்கிரமிப்பை செலுத்த தொடங்கியுள்ளன. விரும்பியோ விரும்பாமலோ அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கு இவை பாரிய சவாலாக உருவெடுத்துள்ளன.
ஊடகத்துறையில் ஏற்பட்டிருக்கும் இந்த பரிணாம வளர்ச்சி ஆரோக்கியமானது என கருதப்படுகின்ற போதும், பாரிய பாதிப்புக்களையும் மன உளைச்சல்கள்களையும் உருவாக்கி வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், தமது சொந்தக் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், வயிற்றெரிச்சலை கொட்டுவதற்கும் இணையத்தள உரிமையாளர்களும், பணியாளர்களும், முகநூல் பாவனையாளர்களும் ஊடக நெறிமுறைகளுக்கு மாற்றமாக செயற்படுகின்றனர். லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் சோனகர் இணையத்தளம், செய்திகளை செய்திகளாக வெளியிடாமல், அந்தச் செய்திககளில் தமது சொந்தக் கருத்துக்களையும், எண்ணங்களையும் செருகி வெளியிடுவது அண்மைக் காலமாக அவதானிக்கப்பட்டு வருகின்றது. இது என்ன ஜேர்னலிசமோ? இறைவனுக்கே வெளிச்சம்.
ஒரு செய்தியில் தமக்கு முரண்பாடு இருந்தால் பிரசுரிப்பதும், பிரசுரிக்காமல் விடுவதும் இணையத்தளங்களின் உரிமை. அல்லது அது தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதானால், அந்தச் செய்தியை பிரசுரித்து விட்டு பின்னூட்டல்களையோ ஆக்கங்களையோ பதிவு செய்யலாம். இதை விடுத்து அநாகரிகமாக ஊடக தருமத்தை மிஞ்சி செயற்படுவது எந்த வகையில் நியாயமாகும்?
இதே இணையத்தளம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தனக்குப் போட்டியான இணையத்தளம் ஒன்றின் இயக்குனரை இல்லாத பொல்லாத கதைகளை இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் இருந்துகொண்டு எவரினதோ பின்புலத்தில் இயங்கிவரும் இந்த இணையத்தளம், தனது செயற்பாடுகளை திருத்திக்கொள்வதே பத்திரிகைத் துறைக்கு ஆரோக்கியமானது.
Post a Comment