(ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளராக மருதமுனையை சேர்ந்த Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா நியமிக்கப் பட்டுள்ளார் .
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.ஜி .கே. முத்துபண்டாவினால் இவருக்குரிய நியமனக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்த 13.11.2018 இலிருந்து செயற்படும் வண்ணம் இந்த நியமனம் வழங்கப் பட்டுள்ளது. இன்னிலையில் இன்று (23) தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளாா்.
அரச கல்வி நிருவாக சேவை தரம்- 11 அதிகாரியான டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா 1964-09-18 ஆம் திகதி மருதமுனையில் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியிலும் கற்றுக் கொண்டார்.
1984 ஆம் ஆண்டு ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்கள் தனது முதல் நியமனத்தை பண்டாரவளை நீட்வூட் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பெற்றுக் கொண்டார். 1989 ஆண்டு அட்டாளைச் சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்தார். இதனை தொடர்ந்து 1990 அண்டு தான் கல்வி கற்ற அல்-மனார் மத்திய கல்லூரிக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார். மிக நீண்ட காலமாக ஆசிரியர் சேவையை மேற்கொண்ட இவர் 2006 ஆம் ஆண்டு தனது கல்விமாணி பட்டத்தை தேசிய கல்வி நிறுவகத்தில் பூர்த்தி செய்து கொண்டார்.
2007 ஆம் அண்டு இலங்கை கல்வி நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர் 2007 தொடக்கம் 2009 ஆம் ஆண்டுவரை கல்முனை கல்வி வலையத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றினார். பின்னர் 2009 ஆண்டு அல்-மனார் மத்திய கல்லூரிக்கு ஆதிபராக நியமனம் பெற்றார். இவரது 5 ஆண்டு அதிபர் சேவைக் காலத்தில் அல்மனார் மத்திய கல்லூரி பல் வேறு வளர்சிப் படிகளை தொட்டது எனலாம்.
2014 ஆண்டு கல்விமுதுமாணி பட்டத்தை பூர்த்தி செய்து கொண்ட இவர் சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தில் நிருவாக பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளராக 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கல்முனை கல்வி வலயத்தின் நிருவாகம் மற்றும் முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இன்னிலையிலேயே தற்போது மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வித்துறைக்கு அப்பால் பல்வேறு சமூக நிறுவனங்களிலும் பொறுப்புள்ள பதவிகளிலிருந்து தனது சமூகத்திற்கு சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டு முதல் அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோர் வலையமைப்பின் தலைவராக இருந்து சேவையாற்றி வருகின்றார். மருதமுனை அபிவிருத்தி மக்கள் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளராக இருந்து மருதமுனையின் நெசவுத் தொழிலுக்கு உயிரூட்டியுள்ளார். st.Johns Ambulance உதவி மாவட்ட ஆணையாளராகவும் கல்முனை ஆயுள்வேத பாதுகாப்புச் சபையின் தலைவராகவும் இருந்து சேவையாற்றும் இவர் இன்னும் பல்வேறு சமூக அமைப்புக்கள், விளையாட்டுக்களகங்களுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.
ஆயுள்வேதம் மற்றும் கொமியோபதி வைத்தியரான Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்கள் மருத்துவத்துறையில் DHMS(SL),PIMP(Ind),DAMP(Ind),RAMP(SL) ஆகிய பட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.
மருதமுனை செய்யது உமர் மௌலான செய்யது முகம்மது மௌலானா, முஹம்மது அப்துல்லாஹ் ஜமாலியா உம்மா ஆகியோரது 4வது புதல்வரான இவர் மருதமுனையை சேர்ந்த செய்னுலாப்தீன் றிஸ்வானாவை கரம் பிடித்துக் கொண்டார்.
Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களுக்கு 2 பிள்ளைகள், தனது மூத்தமகள் உமர் மௌலானா அப்றோஸ் இந்தியா கல்கத்தா மேற்கு பல்கலைக்கழகத்தில் கொமியோபதி விசேட வைத்திய அறுவைச் சிகிச்சை பட்டத்தை அண்மையில் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் துறையில் கிழக்கிலங்கையில் முதல் பட்டதா ரி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாவது மகன் உமர் மௌலானா அப்ஸர் லபீப் மௌலானா தற்போது வர்தகப் பிரிவில் கல்வி கற்று வருகின்றார்.
வலயக்கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களை எமது திங்கள் செய்திப் பிரிவு வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றது. இன்னும் இன்னும் Dr. எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா அவர்களின் சேவை இந்த மண்ணுக்கு கிடைக்க வேண்டும் எனப் பிராத்திக்கின்றோம்.