அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கு மாகாண அமைச்சர் நஸீரின் நிதிஒதுக்கீட்டில் பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றது.
சபா முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத் தலைவர் ஏ.எல்.சமீர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், நன்நடத்தை, சிறுவர் பராமரிப்பு மற்றும் சமூகசேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.முஹம்மது நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள 116 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அவர்களது முச்சக்கர வண்டிகளுக்கான டயர்களும், தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் 100 விவசாயிகளுக்கு மண்வெட்டிகள் போன்ற விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம்.வாஹீட், பொது மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஐ.எம்.நயீம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் சுமார் ரூபாய் 20 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மாகாண அமைச்சர் நஸீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'பொத்துவில், ஒலுவில், இறக்காமம், பாலமுனை போன்ற எல்லாப் பிரதேச மக்களும் எனக்கு வாக்களித்து, என்னை வெல்ல வைத்திருக்கின்றார்கள். அதனால் நான் இன்று கிழக்கு மாகாணத்தினுடைய சுகாதார அமைச்சராக இருக்கிறேன். அட்டாளைச்சேனை ஈண்ற மகன் சுகாதார அமைச்சராக இருப்பது இந்த மண்ணுக்குப் பெருமை. எல்லாப் பிரதேச மக்களும் வாக்களித்து, இந்த ஊருக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளனர். எனவே, நான் உங்களுக்கு மட்டும் சேவை செய்தால் போதாது. கிழக்கு மாகாணத்திலுள்ள எல்லாப் பிரதேச மக்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்.' எனத் தெரிவித்தார்.
Post a Comment