( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அரசாங்கத்தின் 'நிலையான அபிவிருத்தியின் ஆரம்பம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் பாரிய சிரமதானப் பணிகள் இடம் பெற்றன.
கல்லூரி அதிபர் ஏ.சீ.எம்.இஸ்மாயிலின் வேண்டுதலின் பேரில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம் பெற்ற இம்மாபெரும் சிரமதானப் பணிகளில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபுல் பிரியலால், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.ஐ.எம்.முஸ்தபா, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக சேவை அமைப்புக்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபையினர் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் மிக நீண்ட காலமாகத் தேங்கிக் காணப்பட்ட பாடசாலைத் தளபாடங்கள், கட்டிடப் பொருட்கள், மற்றும் இடிபாடுகள் போன்றன துப்பரவு செய்யப்பட்டதோடு, டெங்கு நுளம்புக் குடம்பிகள் உருவாகக் கூடிய இடங்களும் அழித்தொழிக்கப்பட்டன.
'இதனைத் தொடர்ந்து பாடசாலை வளாகம் இயற்கை எழில் கொஞ்சும் இரம்மியமானதொரு இடமாக மாற்றப்படுவதோடு, பாடசாலையில் பாரிய அபிவிருத்திப் பணிகளும் இடம் பெறவுள்ளது' என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.



Post a Comment