( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீரிய சிந்தனைகளை சிரமேற் கொண்ட கல்முனை வலயக் கல்விக் காரியாலயத்தினர், அனைவரும் ஒன்றிணைந்து 'போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டிற்கான சித்திரை மாத உறுதி மொழி' எனும் மகுடத்தில் போதைக்கு எதிராக சத்தியப் பிரமாணஞ் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று காலை கல்முனை வலயக் கல்விக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் வலயக் காரியாலயத்திலுள்ள கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சத்தியப் பிரமாணத்தில் ஈடுபட்டனர்.
சத்தியப் பிரமாண நிகழ்வைத் தொடர்ந்து, இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டமொன்று பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம் பெற்றது. இதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.எல்.ஏ.றகீம், பி.எம்.வை.அறபாத், திருமதி.ஜிஹானா அலீப், ஜே.ஏ.மலீக், ஏ.பி.எப்.நஸ்மியா, ஆசிரிய ஆலோசகர் திருமதி. பத்திரண ஆகியோரும் போதைக்கு எதிராகக் கருத்துக்கள் தெரிவித்தனர்.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:-' அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு முன்னெடுத்துவரும் திட்டங்களில் 'போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு' போன்றவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. இவை இரண்டும் ஒழிக்கப்பட்டால் உண்மையில் எமது நாடு உலகில் முதன்மை பெற்ற நாடாகி விடும். எனவே எமது நாட்டை இதுவரை ஆட்சி புரிந்த ஜனாதிபதிகளில் மைத்திரிபால சிறிசேன அவர்கள் உண்ணதமானவராகக் காணப்படுகிறார். இவரது சீரிய சிந்தனைகளுக்கு மதிப்பளித்து, நமது சத்தியப் பிரமாணத்தில் உள்ளவற்றை நமது வாழ்விலும், மற்றவர் வாழ்விலும், மாணவர் வாழ்விலும் நடைமுறைப்படுத்துவதற்கு வழிவகுப்போம்' எனத் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், சிங்கள மூவின உத்தியோகத்தர்களும் நல்லுறவுடன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.










Post a Comment