நிந்தவூர் பிரதேச சபையின் ஆட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகியது! முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில்!!


                      ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
நிந்தவூர் பிரதேச சபையிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான முதலாவது அமர்வும், தவிசாளர், உபதவிசாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நேற்று மாலை நிந்தவூர் பிரதேச சபை 'சபா' மண்டபத்தில் இடம் பெற்றது.

பெப்ரவரி 10ந் திகதி இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் இன்று வரை யார் ஆட்சியமைப்பது என்று தெரியாமல் மக்களைக் குழப்பிக் கொண்டிருந்த நிந்தவூர் பிரதேச சபையின் ஆட்சி, நேற்று முதல் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பினர் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசமாகியது. ஐ.தே.கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்ற ஒரு உறுப்பினரை இணைத்துக் கொண்டு, ஆட்சியமைத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது அணியிலிருந்த முஹம்மது அலியார் முஹம்மது தாஹீர் என்பவரை தவிசாளராகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான யூசூப் லெவ்வை சுலைமா லெவ்வை என்பவரை உதவித் தவிசாளராகவும் தெரிவு செய்தனர்.
இத்தெரிவுகள் யாவும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை சலீம், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.றாபி, பிரதேச சபைச் செயலாளர் ஏ.ஏ.சலீம் ஆகியோர் முன்னிலையில் சம்பிரதாய பூர்வமாக இடம்பெற்றன. 

இன்று புதிதாக, மூன்றாவது தடவையாகத் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட எம்.ஏ.எம்.தாஹீர் கருத்துத் தெரிவிக்கையில்:- ' தேர்தல் காலங்களில் எமக்கு வாக்களித்த ஆதரவாளர்கள் மூலமாக நமக்குள் பல கருத்து முரண்பாடுகள், மனக்குரதங்கள் ஏற்பட்டிருக்கலாம். அவற்றை நாம் இன்றுடன் மறப்போம். நமது பிரதேசத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு நாமெல்லொரும் ஒற்றுமையாகச் செயற்படுவோம். இன்று என்னைத் தவிசாளராகத் தெரிவு செய்த உங்களுக்கும், எல்லாவற்றிற்கும் காரணமான அல்லாஹ்வுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்' எனத் தெரிவித்தார்.

தவிசாளரின் உரையைத் தொடர்ந்து தவிசாளர், உதவித் தவிசாளர், ஆளுந்தரப்பு, எதிர்தரப்பு உறுப்பினர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ஆறத்தழுவி 'முஸாபகா' செய்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் சுகாதார .இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் சட்டத்தiணி எம்.ஏ.எம்.அன்சில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நிந்தவூர் பிரதேச அமைப்பாளர் டாக்டர்.ஏ.எல்.பரீட், முன்னாள் வட-கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஐ.எம்.இஸ்ஸதீன் உள்ளிட்ட கல்விமான்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களால் பிரதேச சபை மண்டபம் முன்னர் ஒரு போதும் இல்லாதவாறு நிரம்பி வழிந்தது. ( ஊடகவியலாளர்கள் கூட செய்திகளைச் சேகரிப்பதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்). ஆதரவாளர்கள் பிரதேச சபைக்குள்ளும், பிரதேச சபைக்கு வெளியிலும் பாற்பாயசம் வழங்கி மகிழ்ந்தனர்.















Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.