(நாச்சியாதீவு பர்வீன்)
“இந்த கட்சியினால் அடையாளம் பெற்றவர்கள், மூலையிலே முடங்கி கிடந்தவர்கள், இவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த இந்த கட்சியை எப்படியெல்லாம் கறுப்புப் பணத்தினாலே கருவருக்கலாமோ என்று இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஆளுங்கட்சியில் இருந்தாலும் எமக்கும் அநியாயம் நடந்துள்ளது” என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புத்தளம் நகர சபையில் வெற்றிபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (30) புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் பிரமாண்டமாக புத்தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுப்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்,
அம்பாறையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,புத்தளத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் எம்மை ஏமாற்றியது. இதன் போது அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையிலும், புத்தள மாவட்டத்தில் புத்தள நகர சபையில் ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எமக்கு உதவியது. அவ்வாறே அனுராதபுரத்தில் கஹடகஸ்திகிலிய பிரதேச சபையில் எமக்கு கிடைத்த ஒரு ஆசனத்தின் ஆதரவை அவர்கள் எம்மிடம் கேட்டார்கள். அவர்கள் எமக்கு வழங்கிய ஆதரவினை கருத்தில் கொண்டு அவர்களுக்கு எமது ஆதரவினை அங்கு வழங்கினோம் ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்களால் தவிசாளரை பெற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் அவர்களின் ஒத்துழைப்போடு எமக்கு உபதவிசாளர் அங்கு கிடைத்துள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையில் ஆறு வட்டாரங்களை நாம் வென்றெடுத்த போதும் ஒரே ஒரு வட்டாரத்தை வென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு நான்கு வருடங்களுக்கும் தவிசாளர் பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்த போதும் எம்மை புறக்கணித்துவிட்டு தமக்கு கிடைத்த தவிசாளர் பதவியை இன்னொருவருக்கு தாரைவார்த்து கொடுத்தது அக்கட்சி. இதனை எவ்வாறு நாங்கள் அர்த்தப்படுத்திக்கொள்வது, இதன் நோக்கம் என்ன? ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை அழிப்பதற்கான ஏற்பாடா? எனும் சந்தேகம் இந்த செயற்பாடுகள் மூலம் எழுந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்நன்றி மறந்த கட்சியல்ல. அவ்வாறே செய்நன்றியை மறக்கின்ற கட்சியுமல்ல. அதேநேரம் அரசியல் நேர்மை தவறிய ஒருகட்சியாகவும் எமது கட்சி இருக்கமாட்டாது.இந்தக்கட்சியானது எந்தசந்தர்ப்பத்திலும் தனித்து தீர்மானிக்கின்ற அல்லது முடிவெடுக்கின்ற கட்சியாக இல்லை அதற்காக எமது கட்சியின் யாப்பு இடம்தர மாட்டாது என்கின்ற சூழலிலே அடுத்து வருகின்ற நாட்களிலேயே தேசிய அரசியலிலே பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவுகள் எடுக்கப்படவேண்டிய சூழ்நிலையில் நாங்கள் எமது அரசியல் உயர்பீடத்தை எதிர்வரும் மூன்றாம் திகதி கூட்டவுள்ளோம்.
இதற்கப்பாலும் இன்னும் ஏராளமான உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி சம்பந்தமான தீர்மானங்கள் குறித்து நாங்கள் கட்சியின் நலன் சார்ந்து, இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் நலன்சார்ந்து, தேசிய அரசியலின் போக்கு தொடர்பில் நிலையான தீர்மானத்திற்கு வரவேண்டிய நிலையில் இருக்கின்றோம். நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் எமது அரசியல் உச்சபீட உறுப்பினர்களின் ஆலோசனையோடு எமது கட்சிக்கும்,சமூகத்திற்கும் நலன்பயக்கின்ற விதத்தில் அமையும் என்கின்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
ஐக்கிய தேசியக்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கைகளிலே இருக்கின்ற இந்த வாக்கு வங்கியை இழந்தால் புத்தளமாவட்டத்தையே தோற்பார்கள் என்பது கண்கூடாக தெரிகின்ற விடயம்.புத்தள நகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்கின்ற விடயத்தில், அவர்களோடு இணைந்து செயற்பட நாங்கள் முனைந்தோம், ஐக்கிய தேசிய கட்சியின் இங்குள்ள அமைப்பாளர்கள் எங்களது வாக்குவங்கி தொடர்பில் சரியான அனுமானம் அற்றவர்களாவே காணப்பட்டார்கள். 11 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்றார்கள். நாங்கள் 5 தொகுதிகளை கேட்டோம். அவர்கள் தரமறுத்தார்கள் ஏற்கனவே திட்டமிட்டு அவர்கள் எடுத்துக்கொண்ட தீர்மானங்களின் படி அவர்கள் செயற்பட்டார்கள். இதே நிலைதான் திருகோணமலையிலும் ஏற்பட்டது. அங்கும் இங்கும் எங்களுக்கு அதிக வட்டாரங்களை நாம் வெற்றிபெற்றுள்ளோம்.இதன் மூலம் அவர்களது அனுமானம் பிழைத்துள்ளது.
இதன் விபரீதம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் வைத்துள்ள உறவில் விரிசல் ஏற்படுகின்ற வகையில் உருவாகியுள்ளது.களநிலவரங்களின் யதார்த்தத்தை கருத்திலே கொண்டு ஆசனங்களை பங்கிட்டிருந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பாசறையில் உள்ள கட்சிகளோடு இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் நிலை வந்திருக்காது. இதனை திருகோணமலை மாவட்ட ஐ.தே க வின் அமைப்பாளர் புத்திசாலித்தனமாக கையாண்டுள்ளார். ஆனால் இங்குள்ளவர்களுக்கு அந்த சமயோசிதம் இல்லாமல் போய்விட்டது.
இந்த கட்சியினால் அடையாளம் பெற்றவர்கள், மூலையிலே முடங்கி கிடந்தவர்கள், இவர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்த இந்த கட்சியை எப்படியெல்லாம் கறுப்புப் பணத்தினாலே கருவருக்கலாமோ என்று இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை பார்க்கும் போது இவர்களுக்கு அரசியலிலே அழிவுகாலம் நீண்ட தூரத்தில் இல்லை என்றே எண்ணத்தோன்றுகின்றது. இதனை எமது வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அண்மையில் கட்சிக்காரியாலத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் தெளிவாக கூறியுள்ளேன். ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பிலான அதீத கற்பனையில் நாங்கள் செயற்படுவது அவசியமில்லை, எதிர்க்கட்சியில் இருக்கவேண்டி வந்தாலும் அதற்க்கு நாங்கள் தயங்க வேண்டிய அவசியமில்லை.இந்தக்கட்சி வளர்ந்ததெல்லாம் எதிர்க்கட்சியில் இருந்தபோதே. எதிர்க்கட்சி அரசியல் செய்து வளர முடியும் என்பதிலேயே நம்பிக்கை வைத்த ஒரு கட்சி இந்த நாட்டிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரம் தான்.
எனவே எதற்கும் தயாரான நிலையில் இந்த உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்கின்ற விடயங்களில் எமது எதிர்பார்ப்பு கைகூடாமல் போகின்ற பொதுக்களிலெல்லாம் நாங்கள் கைசேதப்படாமல் நாங்கள் மானத்தோடும்,மரியாதையோடும் ,கௌரவத்தோடும் அந்தந்த சபைகளில் அரசியல் செய்கின்ற கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். எனக்கூறினார்
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் மற்றும் புத்தளமாவட்டத்தில் வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment