யுத்தத்துக்கு முன்னர் பாரம்பரியமாக யாழில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூன்று தசாப்தங்களாகியும் இன்னும் அகதி வாழ்வு வாழ்வது வேதனை தருகின்றது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டிக்கான தேசிய மீலாத் விழா யாழ்.உஸ்மானியாக் கல்லூரியில் 23ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
யாழ்.மக்கள் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பிய நிலையிலும் 450 குடும்பங்கள் இன்னும் இருக்க இடமின்றி கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் மீள்குடியேறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். 30 ஆண்டுகளின் பின் வந்தும் இருக்க இடமில்லை.
காணியைப் பெற்றுக்கொள்வதில் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். நானும் இங்கு வந்து அரசாங்க அதிபரின் தலைமையில் பல கூட்டங்களை நடத்தியும் எதுவும் நடக்கவில்லை.
2018 இல் அவர்களுக்குரிய வீடுகளை அமைக்க நிதியை நான் பெற்றுத் தருகின்றேன். அவர்களுக்குரிய காணிகளை உரிய முறையில் வழங்க அண்ணன் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ்த் தலைமைகள் மற்றும் அரச அதிகாரிகள் முன்வர வேண்டும்.
முதற்கட்டமாக யாழில் குடியேறியுள்ள மக்களுக்குரிய வீடுகளை அமைக்க உதவி புரியுங்கள். புத்தளத்தில் இருக்கும் ஏனைய மக்களை இரண்டாம் கட்டமாக மீள்குடியமர்த்த உதவிபுரியுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
Post a Comment