-பிரதேச செயலாளர் றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
ஜனாதிபதி செயலகத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் 'தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி வாரத்தை' முன்னிட்டு, நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையமும், நிந்தவூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஹார்லிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் பாலமுனை விவசாயக் கல்லூரியின் பண்ணை முகாமையாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான எம்.வை.எம்.நியாஸ், தெங்கு அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர் எம்.எம்.நலீம், மாவட்ட விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள்;, விஞ்ஞான தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், நிந்தவூர்ப் பிரதேச விவசாயிகளின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் 'நஞ்சற்ற, விசமற்ற உணவை உற்பத்தி செய்வதற்காக சேதனப் பசளையை (கொம்போஸ்) பயன்படுத்துவோம். அதனை நாமே, நமது வீட்டுக் கழிவுகளில் இருந்து தயாரிப்போம்' என்ற மகுடத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட சேதனப் பசளையை பொதி செய்து, விற்பனை செய்யும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.
இதன் முதற்பொதியை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதேச செயலாளர் திருமதி. றிபா உம்மா ஜலீல் ரூ.1000 கொடுத்து வாங்கி, விற்பனையை ஆரம்பித்து வைத்தார்.
இங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்:- 'இந்த அம்பாரை மாவட்டத்தில் விவசாயத்தில் பெரும் சாதனைகளை நிந்தவூர் பிரதேச விவசாயிகள் புரிந்து வரலாறு படைத்துள்ளதை நானறிவேன். இந்த வரலாறுகள் காலத்தால் அழியக் கூடாது. அவை ஆவனப்படுத்தப்பட வேண்டும். பிற்காலச் சந்ததியினருக்கு அவை வழிகாட்டியாக அமைய வேண்டும். இப்பணியை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹார்லிக், பாலமுனை விவசாயக் கல்லூரி பண்ணை முகாமையாளர் நியாஸ் போன்றோர் முன்னின்று செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்' எனத் தெரிவித்தார்.
Post a Comment