-சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
சுகாதாரப் பிரதியமைச்சர் பைசால் காசீமின் முயற்சியினால் நிந்தவூரில் உருவாக்கப்பட்ட இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனக் கிளை (ஒசுசல) நேற்று நிந்தவூர் பிரதான வீதியிலுள்ள வெள்ளை மாளிகைக் கட்டிடத் தொகுதியில் திறந்து வைக்கப்ட்டது.
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவர் சட்டத்தரணி சரத் லியனகே தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, கிளையினைத் திறந்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரீப் சம்சுதீன், ஏ.எல்.தவம், i.எல்.எம்.மாஹீர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் மன்சூர் ஏ. காதர், இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் டாக்டர்.றூமி உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
'இக்கிளை திறப்பின் மூலம் நிந்தவூர்ப் பிரதேசத்தில் வாழும் சுமார் (45) நாற்பத்தி ஐயாயிரம் மக்கள் நன்மையடையவுள்ளனர் என்றும், தொற்றா நோயினால் பீடிக்கப்பட்டு, அதிக விலைகளில் மருந்துகளைப் பெற்றுக் கொண்ட நோயாளர்களுக்கு அரச ஒசுசல ஒரு வரப்பிரசாதம்' என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மும்மதத் தலைவர்களினதும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் அங்கு இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன ' எமது நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக அதிக விலை உயர்ந்த மருந்துப் பொருட்களின் விலைகளை எண்ணிப்பார்க்க முடியாத அளவு குறைத்துள்ளது. அது மாத்திரமன்றி புற்று நோய் போன்ற கொடிய நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற பலமில்லியன்களைச் செலவிட்டு வருகிறது. கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத ஏழை மக்களின் கண்களுக்கு இலவசமாக வில்லைகளைப் பொருத்தி,சத்திர சிகிச்சைகளையும் செய்து வருகிறோம். இவைகளால் மரணத்தைத் தழுவியிருக்க வேண்டிய ஆயிரக்கணக்கான நோயாளர்கள் இன்றும் சுகதேகிகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தும் நல்லாட்சியின் பயன்கள்' எனத் தெரிவித்தார்.










Post a Comment