(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள சந்திவெளி-பாலையடித்தோணா கிராமத்தில் 09 வயதுச் சிறுமியொருவர் ஒரு நாள் பீடித்த காய்ச்சலில் மரணமடைந்து விட்டதாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (17 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலையடித்தோணா -9 ஐச் சேர்ந்த அற்புதன் கிதுஷா என்பரே மரணித்துள்ளார்.
இச்சிறுமிக்கு சனிக்கிழமை (16) காய்ச்சல் கண்டிருந்தபோது உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகலளவில் இச்சிறுமிக்கு காய்ச்சல் குறைந்திருந்த போதும் வாந்தி, குமட்டல், ஏற்பட்டதோடு வாயிலிருந்தும் நாசியிலிருந்தும் சளி வெளி வந்ததோடு சிறுமி சோர்வடைந்து மயக்கமாகிய நிலையில் உடனடியாக மீண்டும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு சிறுமியை எடுத்துச் சென்றுள்ளனர். வழியிலேயே சிறுமி உயிரிழந்துள்ளார்.
சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படடது.
விதவையான இச்சிறுமின் தாய் கிருபைராணி வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கு சென்றுள்ள நிலையில் சிறுமி பாட்டியின் பராமரிப்பிலேயே இருந்து வந்துள்ளார்.
சம்பவ தினம் காலையில் சிறுமி நிலத்தில் விழுந்து கிடந்த நாவற்பழங்களை எடுத்து உண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம்பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment