( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கலாபூசனம் கவிஞர் நிந்தவூர் மக்கின் ஹாஜியார் எழுதிய 'பெருவிரல், கண்ணாடி, கடலுக்குப் போன மச்சான்' ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும், நிந்தவூர் பிரதேச கலாச்சார அதிகார சபையின் அனுசரணையில் நேற்று இடம் பெற்றது.
நிந்தவூர் கலை இலைக்கியப் பேரவைத் தலைவர் டாக்டர் ஏ.எம்.ஜாபீர் தலைமயில், நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நடைபெற்ற இவ்விழாவில் சுகாதார பிரதியமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீல் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரபல கவிஞரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான சத்தார் எம்.பிர்தௌஸ், ஓய்வுபெற்ற அதிபர் எஸ்.அஹமது ஆகியோரினால் நூல் விமர்சனம், நயத்தல் என்பன இடம்பெற்றது.
நூலாசிரியர் மக்கீன் ஹாஜியார் பிரதம அதிதி, கௌரவ அதிதிகளுக்கு முதலாம் இரண்டாம் பிரதிகளை வழங்கியதன் மூலம் நூல் வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார்.
பிரதியமைச்சர் பைசால் காசீம் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'முஸ்லிம் கலாச்சார அமைச்சர் அவர்களின் தலைமையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று கூடி, எமது முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை இவர்கள் தீர்த்து வைக்கத்தவறினால், நாமெல்லோரும் பாராளுமன்றத்தில் ஒரு தனிக்குழுவாகச் செயற்படத் தீர்மானித்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கு நானும் ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்திருக்கின்றேன்' எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்;:-'யார் நினைத்தாலும் பாராளுமன்றத்தை 4 வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது. அதுவும் ஜனாதிபதி நினைத்தால் மாத்திரமே 4 வருடத்தின் பின்னரும் கலைக்கலாம். ஆனால் சிலர் பாராளுமன்றத்தைக் கலைத்து, ஆட்சியைப் பிடிக்கலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். எனத் தெரிவித்தார்.













Post a Comment