-அமைச்சர் றவூப் ஹக்கீம் இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்திடம் உறுதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
'2008ம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கையிலுள்ள மௌலவி பட்டம் பெற்றவர்களுக்கு 'மௌலவி ஆசிரியர் நியமனம்' விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்' என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். பிரதமர் ஒரு விடயத்தில் வாக்குக் கொடுத்தால், நிச்சயம் அதை நிறைவேற்றுவார். மௌலவி ஆசிரியர் விடயத்தில் நானும் அக்கரையாக இருப்பேன்' என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பட்டம் பெற்ற மௌலவிகளும், இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும் இணைந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஐச் சந்தித்துக் கலந்துரையாடிய நிகழ்வொன்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரக் கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.அனஸ் தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி. ஆரீப் சம்சுதீன், ஏ.எல்.தவம், சட்டத்தரணி. இழவள் அன்சார் மௌலானா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும், மௌலவிகளும், மௌலவியாக்களும் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு, கருத்துக்களைப் பரிமாறினர்.
அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவியா ஆசிரியை ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில்:- 'இந்த மௌலவி ஆசிரியர் நியமனம் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புச் செய்யப்படடு வருகின்றமை ஒரு வேதனையான விடயமாகும். இங்கு சகோதரி ஒருவர் கெட்ட கேள்வி உண்மையில் நியாயமானது. அது என்னைப் போன்ற முஸ்லிம் தலைமைகளைக் குற்றஞ் சாட்டுகின்ற வகையில் அமைந்திருந்தது. என்றாலும் இந்த விடயம் சம்பந்தமாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் நான் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் அவர்கள் அதனை விரைவில் செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். பிரதமரைப் பொறுத்த வரையில் அவரை வாக்குறுதி அளிக்க வைப்பது கொஞ்சம் சிரமம். ஆனால் அவர் வாக்குறுதி அளித்தால் நிச்சயம் நடக்கும். எனவே இதில் நான் கவனமாக இருந்து மௌலவி ஆசிரியர் நியமனத்தை செய்து தருவேன்' என உறுதியளித்தார்.
இறுதியில் மௌலவி ஆசிரியர்களின் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் இஸ்லாமிய ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.அனஸினால், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கையளிக்கப்பட்டது. 








Post a Comment