
(அஸ்லம் எஸ்.மௌலானா, யூ.கே.காலீத்தீன்)
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த அடைமழை காரணமாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள எஹெட் வீட்டுத்திட்ட கிராமம் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து நிர்க்கதியடைந்துள்ள மக்களுக்கு உதவ சாய்ந்தமருது பிரதேச செயலகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்..
கிராம சேவகருக்கு பல தடவை அறிவித்தும் கூட அவர் இன்று மாலை ஐந்து மணி வரை இங்கு வருகை தரவில்லை என அவ்வேளையில் அங்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் அப்பகுதி மக்கள் கண்டனம் வெளியிட்டனர்.
கடந்த சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த மாளிகைக்காடு கிராமத்தை சேர்ந்த அறுபது குடும்பங்களுக்காக 2008 ஆம் ஆண்டு எஹெட் எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட அறுபது வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டத்தில் வசித்து வருகின்ற மக்களே இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, நிர்க்கத்தியடைந்திருக்கின்றனர்.
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இந்த வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததனால், அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்று காலை மற்றும் பகல் உணவுகளை ஹோட்டல்களில் வாங்கி உண்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இப்பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகருக்கு இன்று காலை ஐந்து மணி தொடக்கம் பல தடவை தொலைபேசி மூலம் நிலைமைகளை எடுத்துக்கூறியும் அவரோ பிரதேச செயலக அதிகாரிகளோ எவரும் இங்கு வந்து என்னவென்றும் கேட்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.









Post a Comment