எமது சேவைக்காலத்துள் ஒருதடவையாவது அரசிடமிருந்து 10ருபாவையாவது கொடுப்பனவாகப் பெறவேண்டுமென எண்ணியிருந்தோம்.அது இன்று கைகூடியுள்ளது.மிக்க மகிழ்ச்சி.இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம். இனி எம்மை நிரந்தரமாக்குவதுடன் கொடுப்பனவை சம்பளமாக்கித்தர கிழக்குமாகாணசபை முன்வரவேண்டும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட தமிழ்மொழிமூலமுன்பள்ளி ஆசிரியர்களின் வலைப்பின்னலின் ஜந்தாவது ஆண்டுநிறைவையொட்டி இடம்பெற்ற விசேட கூட்டத்தில் உரையாற்றிய வலைப்பின்னலின் தலைவி செல்வி என்.நஜிமுன்நிசா மற்றும் செயலாளர் திருமதி எஸ்.சிவரஞ்சனி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.
மனித அபிவிருத்தித்தானம் 2011இல் உருவாக்கிய மேற்படி வலைப்பின்னலின் ஜந்துவருட நிறைவையொட்டி தாபனத்தின் காரைதீவு தலைமையகத்தில் வலைப்பின்னலின் நிதிச்செயலாளர் செல்வி எம்.வத்சலா தலைமையில் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.
நிகழ்விற்கு அதிதிகளாக இலங்கை மனித உரிமைகள் தாபனத்தின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் மனித அபிவிருத்தித் தாபனத்தின் கிழக்குமாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தாபனத்தின் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு அவர்கள் மேலும் உரையாற்றுகையில்:
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவ.சந்திரகாந்தனின் காலத்தில் உருவான இக்கொடுப்பனவு விடயம் 5வருடங்கள் கடந்து இன்று கனியாகியுள்ளது.
அன்று நாம் இருதடவைகள் இங்கிருந்து கல்முனை விகாராதிபதி சங்கரத்ன தேரர் எமது இருபெரும் கண்களான ஸ்ரீகாந் சேர் சகா சேர் ஆகியோர் சகிதம் சென்று திருமலை சென்று முதலமைச்சரைச் சந்தித்தோம்.
அன்று நாம் கிழக்கு மாகாணத்தில் ஆக 930 பேரே முன்பள்ளி ஆசிரியர்களாக இருந்தோம்.அன்று வாரியத்தலைவராக திரு.ந.நடராசா இருந்தார்.
பின்பு அடுத்துவந்த இரு மேதினக்கூட்டங்களில் முன்பள்ளிஆசிரியர்களுக்கு நிரந்தர சேவைவழங்குவதுடன் முறையான வேதனம் வழங்கப்படவேண்டுமென குரல் எழுப்பியதோடு தீர்மானத்தை ஜனாதிபதி பிரதமர் கிழக்கு மாகாண முதலமைச்சர் கல்வியமைச்சர் உள்ளிட்டோருக்கு அனுப்பியிருந்தோம்.
அதுமட்டுமல்ல அண்மையில் அரசியலமைப்பு சீர்திருத்த முன்மொழிவுகளில் ஒன்றாக முன்பள்ளிகளை கல்வித்திணைக்களத்திற்குள் முறையாகக் கொண்டுவருவதோடு முன்பள்ளி ஆசிரியர்களை ஆசிரியர்சேவைக்குள் உள்வாங்கவேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளோம்.
இவ்வாறு பல முயற்சிகளை எமது வலைப்பின்னலூடாகச் செய்திருந்தோம். அனைத்திற்கும் இன்று ஓரளவு நிம்மதி தரக்கூடிய பதில் கிடைத்துள்ளது.
அதற்காக இன்றைய முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கல்வியமைச்சர் சி.தண்டாயுதபாணி முன்பள்ளிவாரிய தலைவர் பொன்.செல்வநாயகம் எமதுவலைப்பின்னலின் ஸ்தாபகர் பி.ஸ்ரீகாந்த் ஆலோசகர் சகா சேர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகூறுகின்றாம். என்றனர்.
சபையோரின் சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.அதையிட்டு கிழக்கு முன்பள்ளி வாரியத்தலைவர் பொன்.செல்வநாயகத்தோடு கலந்துரையாடுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது.செயலாளர் சிவரஞ்சனியின் நன்றியுரையும் இறுதியாக இடம்பெற்றது.
Post a Comment