முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு செல்லும் வீதியின் ஆரம்ப பகுதியில் உள்ள 500 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலின் தல விருட்சமான பனிச்சை மரம் அமைந்துள்ள பிரதேசம் தொடர்பில் இன்று ஆலய நிர்வாகத்தினருக்கும் பொலிசாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ள. இதனால் குறிப்பிட்ட பகுதியில் பதட்டமான சூழல் நிலவியிருந்தது.
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் குறித்த மரம் அமைந்துள்ள பிரதேசத்தினை புனிதப்படுத்தி அதில் ஒரு மடம் அமைப்பதற்காக ஆலய நிர்வாகத்தினரும் மக்களும் ஈடுபட்டிருந்த வேளையில் அருகில் உள்ள காணி உரிமையாளரினால் பனிச்சை மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டு இருப்பதை அவதானித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினரால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அந்த பிரதேசமும் குறித்த மரமும் ஆலயத்துக்கு சொந்தமானது என வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்ட இடத்தில் மடம் கட்டுவதற்கான வேலையினை ஆரம்பிக்க இருந்த நிலையில் அருகில் உள்ள காணி உரிமையாளரினால் காணியின் வேலிகள் அகலமாக்கப்பட்டு புனித பிரதேசப் பகுதியில் வேலி அமைக்கப்பட்டும் இருந்தது.
இதைத் தொடர்ந்து தல விருட்சம் அமைத்துள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி இருந்தது இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாகாணசபை உறுப்பினர் சிவநேசன் மக்களை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment