(எம்.எல்.சபீர்)
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் முரண்பட்டுள்ள செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவுத் ஆகியோரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து உடனடியாக விலகக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் எ.எல்.எம்.அதாஉல்லாஹ் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஹசன் அலி மற்றும் பசீர் சேகுதாவுத் ஆகியோர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ்வை கொழும்பில் வைத்து சந்தித்துள்ளனர். இதன்போதே மேற்படி வேண்டுகோளை அதாஉல்லாஹ் விடுத்துள்ளார்.
இப்போதே கட்சியிலிருந்து நீங்கள் இருவரும் விலகிக் கொண்டால் அது அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு மிகவும் சாதகமாகப் போய்விடும். சந்தர்ப்பம் வருகின்றபோது விலகிக் கொள்ளலாம். அதுவரைக்கும் கட்சியில் இருந்து கொண்டு வேறு நபர்களை முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேற்றுவதற்கு காயை நகர்த்துங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இந்தக் கருத்தை குறித்த இருவரும் ஏற்றுக் கொண்டுள்ளதுடன் கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கும், அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு எதிரான செயற்பாடுகளுக்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி அமைச்சர் ரவுப் ஹக்கீமுடன் இணைந்து செயற்படுவது போன்று ஹசன் அலியும், பசீரும் இனி இயங்கப் போவதாக நம்பகரமாகத் தெரியவருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தலைமையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், அமைச்சர் ஹக்கீமின் கொட்டத்தை அடக்குவதற்காகவும் மூவரும் இணைந்து மிகவும் வேகமாக இயங்குவதற்கும் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு எதிரான கடிதத்தில் உயர்பீட உறுப்பினர்கள் பலரும், அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் ஒருவரும் கையொப்பம் இட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Post a Comment