தேமுதிகவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை ..1


திமுக உடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். கூட்டணி தொடர்பாக தேமுதிக உடன தொடர்ந்து பேச்சவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், அதிமுகவை எதிர்க்க, பலமான கூட்டணியை உருவாக்க, திமுக முயற்சி செய்து வருகிறது. அதற்காக, தேமுதிக, காங்கிரஸ் உட்பட, சில கட்சிகளுடன் பேச்சு நடத்தியது. இந்தப் பேச்சில், பெரிய அளவில் நிபந்தனைகள் விதிக்காமல், காங்கிரஸ் அணி சேர்ந்தது. ஆனால் பிடி கொடுக்காத தேமுதிக பல நிபந்தனைகளை விதித்தது. பாஜக, மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் கூட்டணி தொடர்பாக விஜயகாந்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நேரடியாகவும் அழைப்பு விடுத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், இம்மாதம், 10ம் தேதி மகளிரணி மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தார். எனினும் விஜயகாந்த் தனது முடிவை மறு பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் நலக்கூட்டணி,பாஜக தலைவர்களும் கூறிவந்தனர். திமுகவோ தனது அடுத்த கட்ட வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டதாகவே கூறப்பட்டது. இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். திமுக போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் அறிக்கை உட்பட சட்டசபைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுசெயலாளர் அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், பாரதி மற்றும் 65 மாவட்ட செயலர்கள் பங்கேற்கு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என்றார்.

தேமுதிக உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த கருணாநிதி, திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை என தெரிவித்தார். மேலும் தேமுதிகவுடன் பேச்சு நடக்கிறதா என்ற கேள்விக்கு நடைபெற்று வருகிறது என்றும் கருணாநிதி கூறினார். தனித்து போட்டி என்றும் திமுக, அதிமுக தவிர ஊழலுக்கு எதிரான கட்சிகள் தனது தலைமையை ஏற்று வரலாம் என்று விஜயகாந்த் தெரிவித்த பின்னரும் திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேமுதிகவை விடாது கருப்பாய் விரட்டி வருகின்றன.

திமுகவை ‘தில்லுமுல்லு கட்சி’ என்று பிரேமலதா பகிரங்கமாக கூறிய பின்னரும் அது குறித்து பதிலடி எதுவும் தராத திமுக, விஜயகாந்தை எப்படியாவது கூட்டணிக்கு கொண்டுவரவேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறது என்பது கருணாநிதியின் பதில் மூலம் தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.