-பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )
கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக கலாச்சாரப் பிரிவும், அட்டாளைச்சேனைப் பிரதேச கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்திய 'கலை இலக்கிய விழாவும், கலைஞர்கள் கௌரவிப்பும்' நேற்று மாலை அட்டாளைச்சேனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.



அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் எஸ்.ரி.அதிசயராஜா தலைமையி;ல் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடறிந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடகர்கள், நாடகக் கலைஞர்கள், ஓவியர்கள், சிறந்த ஊடகவியலாளர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வசந்தம் எப்.எம் அறிவிப்பாளரும், கவிஞருமான ஏ.எல்.அஸ்கர், ரூபவாஹினி ஊடகவியலாளரும், கவிஞருமான ஏ.எல்.றமீஸ், பிரபல கவிஞர்களான கலாபூசணம் ஆசுகவி அன்புடீன், கலாபூசணம் பாலமுனை பாறூக், ஈழமதி ஜப்பார், கலாபூசணம் பாலமுனை ஆதம், கவிதாயினி மும்தாஜ் ஹமீட், திருமதி.றாசீக், பன்நூலாசிரியர் எஸ்.எல்.மன்சூர், கலைப்பிறை வஹாப்தீன், சின்னப்பாலமுனை முஹா போன்ற பல கலைஞர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.










பிரபல கவிஞரும், எழுத்ததாளரும், நாடகத்தயாரிப்பாளருமான கலாபூசணம் பாலமுனை ஆதத்தின் தயாரிப்பிலான 'டெங்கு நோய்' சம்பந்தமான விழிப்புணர்வூட்டல் நாடகமும் அரங்கேற்றப்பட்டது.

தென் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'அம்பாரை மாவட்டத்தில் மாத்திரமல்லாது இந்த நாட்டிலிருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே சிறந்த கலை, கலாச்சாரப் பாரம்பரியங்களை முதன் முதலில் வளர்த்த பெருமை அட்டாளைச்சேனை மக்களையே சாரும். அதிலும் குறிப்பாக அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இங்கிருந்துதான் பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். இங்குதான் கலை இலக்கியம் என்ற செயற்பாடு இயற்கை ரீதியாக ஆரம்பித்திருக்கின்றது. எனவே, இப்பிரதேசத்தில் இவ்வாறானதொரு விழா எடுப்பதென்பது சாலப் பொருத்தமானதாகும்' எனத் தெரிவித்தார்.




Post a Comment