கல்முனை வலய சமாதானக் கல்வி இணைப்பாளராக 2014ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த நிந்தவூர் எம்.ஏ.எம்.றஸீன் 2017.09.18ந் திகதியிலிருந்து கல்முனை வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலைப் பட்டதாரியான றஸீன் நிந்தவூர் பெரிய ஜூம்ஆப்பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளராகவும், அம்பாரை மாவட்ட அனைத்துப்பள்ளி வாசல்கள் சம்மேளனச் செயலாளராகவும், சம்மாந்துறைப் பொலிஸ் ஆலோசனைக் குழு செயலாளராகவும், இனநல்லிணக்கக் குழு அங்கத்தவராகவும் இருந்து அரும்பணியாற்றி வருகிறார்.
கல்முனை வலயத்தில் சமாதானக் கல்வி இணைப்பாளராக இருந்த காலத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவுகளை வலுவடையச் செய்யக் கூடிய பல நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்து, சிறப்பாய் நடைமுறைப்படுத்தி, வெற்றி கண்டவர்.
தற்போது இவர் சமாதானக் கல்வி இணைப்பாளரோடு, முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை வலய முன்பள்ளிகளின் அபிவிருத்திகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே எண்ணத் தோன்றுகிறது.
நிந்தவூர் கமுஃஅல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஆசிரியனாக இருந்த எம்.ஏ.எம்.றஸீன் நிந்தவூர் கமுஃஅல்-அஷ்றக் தேசியக் கல்லூரி , பேராதனைப் பல்கலைக் கழகம், கொழும்பு திறந்த பல்கலைக் கழகம் போன்றவற்றின் பழைய மாணவருமாவார்.
எப்போதும் எறும்பு போல் சுறுசுறுப்பாகச் செயற்பட்டு சகல தரப்பினருடனும் மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும், கனிவுடனும் பழகும் இயல்பு கொண்ட எம்.ஏ.எம்.றஸீன் முன்னாள் நிந்தவூர்க் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம்.அமீன், கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று வலயங்களின் முன்னாள் வலயக் கல்விப்பணிப்பாளராக இருந்து அரும்பணியாற்றிய எம்.ரி.ஏ.தௌபீக் அவர்களின் சகோதரியான றைஹானத்தும்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வருமாவார்.
இவருக்கு வழங்கப்பட்டுள்ள இப்பதவி உயர்வினை கல்முனை வலய முன்பள்ளி இயக்குணர்களின் சம்மேளனம் வரவேற்று, தமது உளமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.


Post a Comment