
-முஜீப் இப்றாஹிம் -
அண்மையில் JVP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மீது ஒரு வீண்பழி சுத்தப்பட்டது.
அதனை சுமத்தியவர் முன்னாள் JVP யின் போர்வாளாக இருந்து பின்னர் தனிப்பட்ட சுகபோகங்களுக்காக அப்பச்சியுடன் அள்ளுண்டு போய் இப்போது ஊழல் மோசடிக்குற்றச்சாட்டில் அகப்பட்டு சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும் விமல் வீரவன்ஸ.
குற்றச்சாட்டு: அனுரகுமார சகோதரயாக்கு அயர்லாந்தில் பெரும் மாளிகையொன்று சொந்தமாக இருக்கிறது.
இந்த குற்றச்சாட்டினை JVP யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அண்மையில் ஹிரு தொலைக்காட்சி விவாதமொன்றில் அழகாக உடைத்தெறிந்தார்.
விமலுக்கு ஆதரவான இணையத்தளம் வெளியிட்ட இந்த குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருந்த மாளிகையின் உரிமைப்பத்திரம் அனுரகுமாரவின் பெயரில் இருப்பதாக காட்டியது. அது ஒரு போட்டோ ஷொப் விளையாட்டு!
ஆனால் பிரித்தானியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அந்த கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் அயர்லாந்துக்கு சென்று குறித்த மாளிகையின் முகவரியை கண்டறிந்து அந்த பிராந்திய கவுன்ஸில் அதிகாரியிடம் உண்மையான உரிமையாளரின் பெயர் அடங்கிய ஆவணமொன்றை பெற்று வந்தார்.
இணையத்தளத்திலும், விமலாலும் போலியாக குற்றம் சுமத்தப்பட்ட அந்த மாளிகை ஒரு வெள்ளையருக்கு சொந்தமானது என்பதை JVP சட்டபூர்வமாக ஆவணங்களுடன் நிரூபித்தது.
அன்றைய விவாத நிகழ்ச்சியிலும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் ஆவணங்களை கண்டதும் வாயடைத்துப்போய் அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
தனது தலைமையின் நேர்மையினை நிரூபிக்க அந்த கட்சி எடுத்துக்கொண்ட சிரத்தை பாராட்டுக்குரியது.
நேர்மையோடும் வினைத்திறனோடும் செயற்படுகிற அரசியல் தலைவர்கள் ஒரு போதும் சேறடிப்புகளுக்கு அஞ்சுவதில்லை.
காரணம் அவர்களது மடிகளில் கனமிருப்பதில்லை.
அதனால் பயமிருப்பதில்லை!
இலங்கை அரசியல் பரப்பில் அந்த வரிசையில் தோழர் அனுரகுமார இன்றளவில் முன்னணியில் இருப்பவர்.
இந்த சம்பவத்தின் பின்புலத்தில் இலங்கை சோனக அரசியலை எண்ணிப்பார்க்கிறேன்......
வெட்கம் தவிர வேறென்ன மிஞ்சும்?
Post a Comment