நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுக்குமாறு கோரி மீனவர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம்.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள 
கடலரிப்பைத் தடுக்குமாறு கோரி மீனவர்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம்.

-மாகாண சபை உறுப்பினர் ஆரீப் சம்சுதீனும் பங்கேற்பு-

( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர் நிந்தவூர்ப் பிரதேசம் வெகுவாகக் கடலரிப்புக் குள்ளாகி, இப்பிரதேசத்திலுள்ள மீனவர்களின் தொழில்களும், அவர்களின் குடியிருப்புக்களும், வாழ்வாதாரங்களும் முற்றாகப் பாதி;க்கப்பட்டுள்ளதனால், இவற்றைத் தடுத்து மக்களைக் காப்பாற்றுமாறு கோரி இன்று (05) நிந்தவூரில் பாரிய ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று இடம் பெற்றது.

மட்டுப்படுத்தப்பட்ட நிந்தவூர்ப் பிரதேச மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டப் பேரணி இன்று காலை நிந்தவூர்க் கடற்கரையில் ஆரம்பித்து, கடற்கரை வீதிவழியே கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியினூடாக நிந்தவூர்ப் பிரதேச செயலகத்தை வந்தடைந்தது.

'நல்லாட்சி அரசே எங்களைக் காப்பாற்று, கடலரிப்பினால் நாமின்று தொழிலை, இருப்புக்களை இழந்துள்ளோம். நாளை மற்றவர்கள் இழப்புக்களைச் சந்திக்கலாம். அதற்கு முன்னர் எங்களைக் காப்பாற்றுங்கள், சரியாகத்திட்டமிடப்படாத ஒலுவில் துறைமுகத்தால் ஒலுவில் மக்களும் தொழிலை, இருப்புக்களை இழந்துள்ளனர், இன்று நிந்தவூர்ப் பிரதேச மக்கள் இழப்புக்களால் துன்புறுகின்றனர், நாளை காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை என்று நீண்டு செல்லலாம். இதற்கிடையில் கடலரிப்பைத் தடுத்து நிறுத்து, ஒலுவில் துறைமுகத்தால் நாம் அழிகிறோம். துறைமுகத்தை நிறுத்து! இல்லையேல் கடலுக்குள் போடப்பட்ட கற்களை மீண்டும் அகற்று!, நல்லாட்சி அரசின் நாயகர்களான மதிப்புக்குரிய மைத்திரியே, மதிப்புக்குரிய ரணிலே எங்களைக் கடலிடமிருந்து காப்பாற்றுங்கள்! , இன்று இந்த ஏழை மீனவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர் மட்டும்தான். அந்த உயிரையும் கடலிடமிருந்து காப்பாற்றுங்கள்' போன்ற வாசங்கள் கொண்ட சுலோகங்களைச் சுமந்தவர்களாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் உரத்த குரலில் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மீனவர்களால் பிரதேச செயலாளர் திருமதி.றிபா உம்மா ஜலீலிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வுகள் அனைத்திலும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் கலந்து கொண்டு, மீனவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கினார் என்று எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.







News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.