-முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பிரதம அதிதி-
( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தெதளஸ் )
அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று சாய்ந்தமருது 'லீ மிர்டியன் ஹோட்டலில்'இடம் பெற்றது.
பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் அம்பாரை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் கே.எம்.சுபையிர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் மாகாணக் கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் கிழக்கு மாகாணத் தவிசாளர் பொன்.செல்வநாயகம்,அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ..அமீர், பிரதிப் பிரதம செயலாளர் ஐ.எல்.எம்.அக்றம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய தினத்தில் 3537 ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ரூபாய் 3000வீதம் இவ்வருடம் தை, மாசி, பங்குணி ஆகிய மாதங்களுக்கான தொகை ரூபாய் 9000த்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்காக மொத்தம் ரூபாய் 148 மில்லியன் அரசாங்கப் பணம் பங்கிடப்பட்டுள்ளது என்றும் இத்தொகை தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் மாகாணத் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தெரிவித்தார்.
அதிதிகளால் பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்குக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து,பாலர் பாடசாலை ஆசிரியைகளால் அதிதிகள், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்குப் பொன்னாடைகள் போற்றி, நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாலர் பாடசாலைச் சிறுவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஏனைய மாகாணங்களில் கவர்ச்சிகரமான கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது எமத கிகை;க மாகாணத்தில் சுமார் ரூபாய் 3000 மட்டும் வழங்கப்படுவதையிட்டு நான் வேதனைப்படுகிறேன்' எனத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி இங்கு பேசுகையில்:- ' நாங்கள் இன்று வெற்றி கொண்டிருக்கும் இந்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு விடயமானது ஒரு ஒன்று பட்ட உழைப்பாகும். முதலமைச்சர் முதல்,மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என எல்லோரும் ஒன்று பட்டு உழைத்ததன் வழியாகவே இன்று இத்தகைய வெற்றியை நாம் அடைந்திருக்கின்றோம்.' எனத் தெரிவித்தார்.
இறுதியில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'கௌரவ ஜனாதிபதி அவர்களும், கௌரவ பிரதம மந்திரி அவர்களும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த நல்லாட்சியில் மாகாண சபைகளின் நிதிஒதுக்கீடுகளும் உரிய முறையில் ஒதுக்கப்படவேண்டும்.13வது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு எந்தளவு அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததோ அதே பேன்றே நிதிஒதுக்கீடுகளும் ஒதுக்கப்படவேண்டும். இதனைச் செய்வதற்கு ஜனாதிபதியோ,அல்லது பிரதம மந்திரி அவர்களோ யாரையும் கூட்டி ஆலோசிக்கவோ,அல்லது விவாதிக்கவோ தேவையில்லை. அவர்கள் விரும்பினால் ஒரு நிமிடத்திற்குள் இதனைச் செய்து முடிக்க முடியும். இரண்டு பெரிய கட்சிகளும் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த நல்லாட்சியில், உண்மையான நல்லாட்சியை நிருபித்துக் காட்ட வேண்டுமானால் மாகாண சபைகளின் நிதிஒதுக்கீடுகளை உடன் அமூல்படுத்துங்கள் என நான் மிக வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்' எனத் தெரிவித்தார்.




Post a Comment