சாய்ந்தமருது மக்களின் நியாயமான, நீண்ட நாள் கோரிக்கையான உள்ளுராட்சி சபை விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மக்களையும் பள்ளிவாசலையும் ஏமாற்றி வருகின்றது. இம்மக்களுடன் ஐக்கியமாக இருப்பதாக மேடைகளில் காட்டிக்கொள்ளும் இவர்கள், இம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் மாறாக சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை கிடப்பில் போடுவதற்கான செயற்பாடுகளைலேயே ஈடுபட்டு வருவதாகவும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசால் முன்னெடுக்கப்படும் அங்கத்துவ வாரத்தை முன்னிட்டு சாய்ந்தமருது-10 ஆம் பிரிவில் கிளை ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு 2016-03-26ஆம் திகதி பிரபல மயோன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் கல்முனை முகாமையாளர் ஏ.எல்.எம்.நியாஸ் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றபோதே ஜெமீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அன்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜெமீல்;
தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்தபோது பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை முன்வைத்து வந்ததாகவும் அக்கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்னரே மாகாண சபையில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கம் இது விடயமாக மிகுந்த கரிசனை காட்டிவருவதாகவும் அவர்கள் தங்களது பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையை வென்றெடுக்க தன்னால் முடியுமான அனைத்தையும் செய்து வருவதாகவும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மக்களின் உந்துதல் மிக அவசியமானதும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் உறுப்பினர்களை இணைத்துக் கொள்வதற்கான முதல் விண்ணப்பப் படிவத்தை முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.அன்வர் பெற்றுக் கொண்டதுடன் 10ஆம் பிரிவுக்கான நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

Post a Comment