நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு கோரிக்கை விடுத்து நேற்று(சனிக்கிழமை) கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவுகின்ற வெப்பமான காலநிலை காரணமாக பல பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு வகையான நோய்களும் ஏற்படுவதால் மக்கள் அஞ்சுகின்றனர்.
மேலும், இந்த வெப்பமான காலநிலையைக் கருத்திற்;கொண்டு பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளை கல்வியமைச்சு எதிர்வரும் மே மாதம்வரை ஒத்திவைத்துள்ளது. இதனை எமது சங்கம் வரவேற்கிறது.
இந்த வெப்பமான காலநிலை காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து பாடசாலை நேரங்களில் குடிநீருக்காக மாணவர்கள் கஷ்டப்படுகின்றனர்.
எனவே, மாணவர்கள் எதிர்நோக்கும் இந்த அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகளையும் நண்பகல் 12 மூடும் தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

Post a Comment